வெப்பாலை மருத்துவம்

 வெப்பாலை மூலிகையின் மருத்துவப் பயன்கள்


கைவைத்தியம்   





நாம் சாலை ஓரங்களிலும் காடு, மலைப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு தாவரம் வெப்பாலை. சுமார் 10 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகவும், பீன்ஸ் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாக பெற்றிருக்கும். இதன் இலைகள் 8 முதல் 15 செ.மீ நீளத்துக்கு வேப்பிலையைப் போன்ற வடிவ அமைப்பினைப் பெற்றிருக்கும். வெப்பாலையின் பூக்கள் வெண்ணிற நறுமணமுடையதாக மல்லிகைப் பூ போன்ற வடிவில் ஒவ்வொரு கிளையின் முனையிலும் மலரும். மிகுதியான பால் உள்ள மரமான வெப்பாலை, மிகுதியான மருத்துவ பயன்களும் கொண்டது.


வெப்பாலை இந்திய மண்ணைத் தாயகமாகக் கொண்டது என்றும் பர்மா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் மிகுதியாகக் காணக்கூடியது, வளரக்கூடியதும் கூட. வெப்பாலையின் இலை, பட்டை, வித்து ஆகியன மருந்தாகிப் பயன் தரவல்லது. இது கசப்புச் சுவையுடையது அல்ல. வெப்பாலையைப் போலவே தோற்றமுடைய வேறு ஒரு மூலிகை உண்டு. அது மிக கசப்புடையது. இதைத் தவறாக வெப்பாலை என்று புரிந்துகொள்ளும் குழப்பம் ஏற்படும். அது உண்மையில் குடசப்பாலை அல்லது குளப்பாலை எனப்படும். இதை நன்கு புரிந்து பயன்படுத்துதல் வேண்டும்.


வெப்பு எனப்படும் வெப்பம் தொடர்பான நோய்களைக் கண்டிக்கக் கூடியது என்பதால் இதற்கு வெப்பாலை என்று பெயர் வந்தது. வெப்ப நோய்களான வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு, காய்ச்சல் போன்ற நோய்களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை. பேதி மற்றும் சீதபேதியை நிறுத்தவல்லது. மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் பல்வேறு சரும நோய்களையும் போக்கி உடலைப் பாதுகாக்கவல்லது. இதன் விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது. குருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் நன் மருந்தாகும். உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல்வலியையும் போக்குவிக்கக் கூடியது.


இதன் பட்டைப் பகுதி மற்றும் விதைகள் இந்திய மருத்துவ முறைகளாக சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும், முத்தோஷக் கேடுகளை (வாத, பித்த, சிலேத்துமம்) சமன்படுத்தி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது.






வெப்பாலை மரப்பட்டையினின்று பிரித்தெடுக்கப் பெறும் Beta amyrin என்னும் வேதிப்பொருள் வலித்தணிப்பானாகவும், வீக்கத்தைக் கரைப்பதாகவும் விளங்குகிறது. மேலும் இது மலேரியா என்னும் குளிர்காய்ச்சல், மூட்டுவாதம், பல்வலி, வீக்கம் இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன் தருகிறது. இது புண்களை விரைந்து ஆற்றும் ஓர் உன்னத குணம் படைத்தது.


வெப்பாலை மரப்பட்டையில் Ursolic acid என்று குறிப்பிடப் பெறும் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளது. இந்த அர்சோலிக் அமிலம் உடலின் தசை வளர்ச்சிக்குப் பயன் தருகிறது. மேலும் இது குருதியில் சேர்ந்த மிகுதியான கொழுப்புச் சத்துவத்தை கரைத்து வெளியேற்றக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்தவல்லது. கொழுப்புச் சத்துவங்களில் கெட்ட கொழுப்பாக நின்று பல்வேறுதுயரங்களைத் தூண்டுவிக்கும் டிரைகிளிசரைட்ஸ் என்னும் கொழுப்பு சேராமலும் சேர்ந்ததைக் கரைக்கவும் மருந்தாகிறது.வெப்பாலை மருந்தாகும் விதம்ஸ்வெப்பாலை மரப்பட்டைச் சூரணம் ஓரிரு தேக்கரண்டி எடுத்துத் தீநீராகப் பருகுகிறபோது பாற்பெருக்கியாகவும், பல்வேறு வயிற்று நோய்களைத் தணிப்பதாகவும் பயன் தருகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி