கேழ்வரகு ரவை இட்லி

 ஆரோக்கியம் பேண மென்மையான கேழ்வரகு ரவை இட்லி


உடலில் சேரும் அதீத கொழுப்பை தவிர்த்தாலேயே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிவப்பு இறைச்சிகள், மாவு உணவுகள், அரிசி மற்றும் அரிசி உணவுகள், தரமற்ற எண்ணெய்கள், கடைகளில் விற்கப்படும் உணவுகள் போன்றவற்றை உண்டால் அவற்றை உடல் கொழுப்பாகவே மாற்றி அமைக்கும்.


இந்த உணவுகளை தவிர்த்து நார்ச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் கட்டோடு, நோய் இன்றி பேணப்படும்.


அந்த வகையில் அரிசியை தவிர்த்து கீழ் கண்டவாறு தரமான, நார்ச்சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு ரவை இட்லியை செய்து உண்ண முயலுங்கள். இதில் அரிசி அறவே இல்லாமையால் நீரிழிவு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது.


வளரும் குழந்தைகளுக்கு நிறைந்த கல்சியத்தை கொடுத்து எலும்பு வளர்ச்சியை சிறப்பாக அமைக்கும். பெண்களுக்கு ஏற்படும் கல்சிய குறைப்பாட்டையும் போக்கும்.


தேவையான பொருட்கள்.


அவித்த கேழ்வரகு (குரக்கன்) மா - 1 கப்

அவித்த ரவை - 1 கப்

உளுந்து - 1 கப்

அளவான பெரிய வெங்காயம்


முதலில் ரவையையும், கேழ்வரகு மாவையும் தனித்தனியே நீராவியில் அவித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை அரைக்கும் பொழுது வெங்காயத்தை பொடியாக வெட்டி அதனையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் அரைத்த மாவுடன் ரவை மற்றும் கேழ்வரகு மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கைகளால் கலந்து புளிக்க விட வேண்டும். மாவு கட்டியாக இல்லாமல் தோசை மா பதத்தில் இருக்க வேண்டும்.


இட்லி வார்க்கும் மயத்தில் மாவில் உப்பு சேர்த்து இட்லிகளை வார்த்து வேக வைக்க வேண்டும்.


குறிப்பு


ரவையையும், கேழ்வரகு மாவையும் சிறிய அளவில் அவிக்காது, ஒரு கிலோ அளவில் தனித்தனியே அவித்து எடுத்து, நீர் பசை போகும் வரை காய வைத்து விட்டு மூடி உள்ள பாத்திரத்தில் இட்டு சேமிக்கலாம்.


இட்லி மா மிஞ்சி விட்டால் மாவை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் இட்லிகளை வார்த்து அதனை மூடிய பாத்திரத்தில் இட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிக்கலாம். மறுநாள் அவற்றை ஆவியில் சூடாக்கினால் போதுமானது.


இட்லிகளை அன்றன்று அரைத்து வார்ப்பதே உடலுக்கு நல்லது. இட்லி மாவை நாட்கணக்கில் சேமித்து வைத்து வார்க்கும் பொழுது அவற்றில் புளிப்பு அமிலங்கள் அதிகரித்து, அவற்றை நாம் உண்டு வரும் பொழுது நம் உடலிலும் அமிலத்தன்மை கூடி விடும். இதனால் வாதம் போன்ற நோய்கள் தோன்றும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி