மார்பு வலி

 மார்பில் வலி ஏன்?


மார்புக்கூட்டில் ஒரு டஜன் விலா எலும்புகள் உள்ளன. இவை அனைத்தும் மைய மார்பு எலும்போடு இணைகின்றன. விலா எலும்புகளுக்கு இடையில் தசைகள் உள்ளன.


மார்புக்கூட்டுக்குள் நுரையீரல்கள், நுரையீரல் உறைகள், சுவாசக்குழாய்கள், இதயம், இதய உறை, ரத்தக்குழாய்கள், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, உதரவிதானம் எனப் பல உறுப்புகள் உள்ளன. இவற்றில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் மார்பில் வலி ஏற்படும்.


* நுரையீரலில் நிமோனியா, காசநோய், சுவாசக்குழாய் அழற்சி காரணமாகச் சளி கட்டும். இதனால் மார்பில் வலி வரும். அப்போது காய்ச்சல், இருமல், சளி, சளியில் இரத்தம் போன்ற துணை அறிகுறிகளும் காணப்படும். நுரையீரல் உறையில் பாதிப்பு இருந்தால், மார்பின் பக்கவாட்டுப் பகுதிகளில் வலி கடுமையாக இருக்கும். தும்மும் போதும் இருமும் போதும் வலி அதிகரிக்கும்.


* பெரும்பாலான நேரம் மார்புவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகள் தான் காரணமாக இருக்கும். இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் பிதுக்கம், உணவுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்பட்டிருந்தால், மார்பில் வலிவரும். இந்த வலியை எளிதில் இனம் கண்டு கொள்ளலாம். நடு மார்பில் வலி அல்லது எரிச்சல் தோன்றும். வாந்தி, ஏப்பம் வரும். நாம் சாப்பிடும் உணவுக்கும் மார்பில் வலி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதை உணரமுடியும்.


* கல்லீரல் அழற்சி காரணமாகவும் மார்பில் வலி வரலாம். அப்போது காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்திருக்கும். பித்தப்பைக் கோளாறுகள் காரணமாக இருந்தால், மார்பில் ஏற்படும் வலி வலது தோள்பட்டைக்குப் பரவும். உதரவிதானத்தில் பிரச்சினை இருந்தாலும் மார்பு வலியானது தோள்பட்டைக்குப் பரவும்.


* மார்பில் அடிபடுவது, எலும்பு முறிவு, இரத்த உறைவு, தசைப்பிடிப்பு போன்றவற்றாலும் மார்பில் வலி வரலாம். அப்போது மார்பைத் தொட்டாலோ, அசைத்தாலோ வலி அதிகரிக்கும். மார்பின் மேல்பகுதியான சருமத்தில் அக்கி அம்மை ஏற்பட்டால், ஆரம்பத்தில் மார்பில் கடுமையாக வலிக்கும். அதற்குப் பிறகுதான் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். மனம் சார்ந்த பிரச்சினை, இரத்தச் சோகை போன்றவையும் மார்பில் வலியைத் தோற்றுவிக்கும்.


நாம் பிறந்ததும் முதல் மூச்சை இழுப்பதிலிருந்து இறுதி மூச்சு வரை நம்மையும் அறியாமல் நிமிடத்துக்கு 18லிருந்து 20 தடவை இந்த விலா எலும்புகள்தான் அசைந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் நாம் தும்மும்போது, இருமும்போது, விழுந்து விழுந்து சிரிக்கும்போது இந்த விலா எலும்புகள் வேகமாகவே அசையும்; இப்படி அசைவதன் பலனாக சுவாசத்துக்குத் துணைபோகின்றன.


அடிக்கடி மார்பில் வலி ஏற்படுபவர்கள் மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., இரைப்பை எண்டாஸ்கோப்பி பரிசோதனைகளை மேற்கொண்டு காரணம் தெரிந்துகொண்டால், மார்பில் வலி வரும்போதெல்லாம் மாரடைப்பாக இருக்குமோ எனப் பதற வேண்டியதில்லை.


யாருக்கு அதிக வாய்ப்பு?


• புகைபிடிப்போர், மது அருந்துவோர்.


• உயர் ரத்த அழுத்தம்.


• இரத்த மிகைக் கொழுப்பு

• நீரிழிவு நோய்.


• இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள்.


• உடற்பயிற்சி இல்லாதவர்கள்.


• உடலுழைப்பே இல்லாதவர்கள்.


• ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள்.


• பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள்.


• முதியோர்.


ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.


குடும்பப் பிரச்சனை, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி