வாழைப்பூ

 ♥ பசி  மற்றும்  நோய் தீர்க்கும் மருந்து  -  உணவு பாகம் - 13. ♥

♥  வாழைப்பூ. ♥ 


               ♥  வாழை  ஒரு மரத்தைப் போல தோற்றமளித்த போதிலும், உண்மையில்,  வாழை  ஒரு மூலிகையாகும்;  சக்திவாய்ந்த வேர்களைக் கொண்ட ஒரு மூலிகை, மேற்பரப்புக்கு வெளியே வராத ஒரு குறுகிய வாழைத்தண்டு,   வாழைநார்,   வாழைபட்டை,  வாழை இலைகள்,  வாழைப்பூ,   வாழைக்காய், வாழைப்பழம்......  etc., உலகின் மிக உயரமான மூலிகையாகும். உலகெங்கும்  70 வகை வாழைகள்  உள்ளன.  நமது    சித்த மருத்துவ நூல்களில் 12 வகை வாழையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 


               ♥  சித்த மருத்துவர் பானுமதி,   "துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது. சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து உண்கிறோம். வாழைப்பூ குருத்தினை பச்சையாகவே சாப்பிடுகிறவர்களும் உண்டு’’ எனக்கூறி 

 வாழைப்பூவின் பலன்களைத் தொடர்ந்து விளக்குகிறார்.


               ♥  வாழைப்பூவை கழுவும்போது   அதிகமாக  கசக்கி  பிழிந்து   துவர்ப்பு சுவையை  நீக்கக்கூடாது.  துவர்ப்பு சுவை  இப்பூ மருந்தாக பயன்படக் காரணமாகிறது.


               ♥  சிலர் குழந்தையின்மையால்  மிகவும் கவலை கொள்வர்.  இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி மகப்பேறு கிடைக்கும்.  ஆண்களுக்கு   தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். நரம்புகளுக்கு வலுவூட்டும்.  இதனாலேயே ‘வாழையடி வாழையாக’ என்ற தொடர் அர்த்தம் பெறுகிறது.


               ♥  பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.


               ♥  வாழைப் பூவினை  ரசம் செய்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நின்று விடும்.   அதோடு உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். 

               ♥  பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு   வாரம் இருமுறை வாழைப்பூவை  உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.   உடல் பலம் பெறும்.  

               ♥  வாழைப்பூ ரசம் சாப்பிட, வறட்டு இருமலும் மறைந்து விடும். 

               ♥  பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பினை அதிகரிக்கச் செய்வதோடு நல்ல செரிமானத்தையும் ஏற்படுத்துகிறது. 


               ♥  வாழைப்பூவில் HDL கொழுப்புச்சத்து இருப்பதால், அது ரத்தக் குழாய்களில் LDL கொழுப்பினால் வரக்கூடிய இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. மூளை மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதில் வாழைப் பூவானது பெரும் பங்கு வகிக்கிறது. 


               ♥  குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும். 


               ♥  ‘‘இன்றைய நவநாகரிக வாழ்க்கையில் மனிதனை வாட்டும் பல நோய்களுள்  "சர்க்கரை நோய்"   முக்கியமானது. வாழைப்பூவை சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் தூண்டப் பெற்று  இன்சுலின்  உற்பத்தி அதிகமாகும்.  இதன் துவர்ப்பு சுவையானது, ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்றுகிறது.   வாழைப்பூவில் உள்ள பீனாலிக் சேர்மங்கள் இன்சுலின் உறிஞ்சு திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 1 மாதம் வரை வாழைப்பூவை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தலாம்.


               ♥  சிலருக்கு மலம் கழிக்கும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை ரத்த மூலம் என்று அழைப்பர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் விரைவில் குணமாகும்.   


               ♥  வாழைப்பூவில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. கரையும் நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்து உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சிக் கொள்ள துணை புரிகிறது. கரையாத நார்ச்சத்து குடலில் உள்ள செரிமானமாகாத நச்சுப்பொருட்களை ஒன்று திரட்டி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல், மூல நோய் ஆகியவற்றிற்கு இப்பூ தீர்வாகிறது.


               ♥  வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும். இதனால் ரத்தமானது அதிகளவு ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும். தொடர்ந்து அதிகளவு  இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதால் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது.  வாழைப்பூவானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.  


               ♥  நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை வாழைப்பூவில் உள்ள டானின், ஃப்ளவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை கட்டுப்படுத்துகின்றன.   இதனால் புற்றுநோய் உண்டாதல், விரைவாக உண்டாகும் சருமச்சுருக்கம் போன்றவை தடை செய்யப்படுகின்றன. 


               ♥  வாழைப்பூ சாற்றில் உள்ள, "எத்தனால்"  தொற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.மேலும் காயங்களையும் தொற்றுநோய் தாக்கத்தலிருந்து வாழைப்பூ பாதுகாத்து விரைந்து குணப்படுத்துகிறது.


               ♥  வாழைப்பூ சாறானது மலேரியா   கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


               ♥  சிலருக்கு இயற்கையிலேயே உடல் அமைப்பு சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல்சூடு தணியும்.


               ♥  குறித்த காலத்தில் உணவு உட்கொள்ளாமல் காலம் தாழ்த்தி உண்ணுவது,  ஃபாஸ்ட் ஃபுட் உணவு, அதிக காரமான உணவு ஆகிய பழக்கங்களால்  அஜீரணக் கோளாறு,  வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.


               ♥  ஆண்மை பெருகும். வாழைப் பூவினால்  இரத்தம்,  முளை, வெள்ளை படுத்தல்,  உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல், ஆசனவாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். ஆண்மை பெருகும். வாழைப் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, கை கால் எரிச்சலுக்கு ஒற்றடமிட்டு பிறகு அதையே வைத்து கட்டலாம்.   


               ♥  வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. வாழைப்பூவிற்கு காயங்களை விரைவாக ஆற்றக்கூடிய குணம் இருப்பதால் அதனை அறுவை சிகிச்சைக்குப் பின் உண்டாகக்கூடிய காயங்களை ஆற்றுவதற்குப் பெரிதும் பயன்படுகிறது.


               ♥  இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.’’  -  பானுமதி,  சித்த மருத்துவர்.     

                                              ++++++++++++


               ♥  இவ்வளவு சத்துக்களையும் முழுமையாக பெற வேண்டுமென்றால், சரியான வாழைப்பூவை தேர்வு செய்வது மிக முக்கியம். வாழைப்பூவினை தேர்வு செய்யும்போது, புதிதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். வாழைப்பூவின் மேற்புறத்தோல் ஒரே சீரான நிறத்துடன் மடல்கள் இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேல்தோலில் வெட்டுக்காயங்கள் ஏதுமின்றி மென்மையாக இருக்க வேண்டும்.  பூவின் காம்புப் பகுதி உறுதியாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும். 

               வாழைப்பூவினை வாங்கி ஓரிரு நாட்களில் பயன்படுத்த வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் மூன்று நாட்கள் கவரில் சுற்றி வைத்துப் பயன்படுத்தலாம்.வாழைப்பூவானது எளிதில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து நிறம் மாறுவதால் இதனை மோரில் அல்லது உப்பு தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.


வாழைப்பூவினை சுத்தம் செய்யும் முறை:-

               ♥  வாழைப்பூவின் வெளிப்புற மடல்களை நீக்கிவிட வேண்டும். இப்பூவின் உட்புறம் உள்ள மலரின் தடித்த தோல் பகுதிகள், கள்ளன் என்று சொல்லப்படும்  கடினமான  நரம்பு போல் இருப்பதை  நீக்கிவிட்டு வெளிர் மஞ்சள் நிற இதழ்களையும்,  மென்மையான   நரம்பு  போல்  இருப்பவர்களையும்  பயன்படுத்த வேண்டும். பூவின் உட்புறத்தில் உள்ள மென்மையானவற்றை முழுவதுமாக பயன்படுத்தலாம்.


               ♥  வாழைப்பூவானது குழம்பு, பொரியல், சாலட், ஊறுகாய், சட்னி, சூப் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

                                              ++++++++++++


♥  சமையல் கலைஞர் நித்யா நடராஜன் எல்லோருக்கும் பிடித்த வாழைப்பு வடை செய்யும் முறையை விளக்குகிறார்…


வாழைப்பூ வடை


தேவையான பொருட்கள்

வாழைப்பூ - 1 (உள் நரம்பு  நீக்கி பொடிப்பொடியாக நறுக்கியது)

வடைபருப்பு - ¼ கிலோ

வெங்காயம் - 2 (பெரியது

பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 5 பல்

இஞ்சி - 1 துண்டு

பட்டை - 1 துண்டு

காய்ந்த மிளகாய் - 3

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)    

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது)

சோம்பு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை

வாழைப்பூவை கொதிக்கும் நீரில் போட்டு அரைப்பதம் வேகவைத்து தண்ணீர் வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடலைபருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைப்பதற்கு முன் ஊறிய பருப்பை கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


காய்ந்த மிளகாய், இஞ்சி, பட்டை, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின், அரைத்த கடலைபருப்பு, அரைத்த மசாலா விழுது, வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை, சோம்பு உப்பு,  தனியாக எடுத்து வைத்த  ஊறிய பருப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அதன்மேல் கடைசியாக வாழைப்பூவை சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி, எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்க வேண்டும்.


               மாலை   நேர   சிற்றுண்டியாக  (ஈவினிங் ஸ்நாக்சாக) குழந்தைகளும், பெரியவர்களும் சாப்பிடலாம். 


               ♥  மருத்துவ குணம் நிறைந்த துவர்ப்பு சுவை மிக்க பொட்டாசியம், வைட்டமின் ‘இ’ அதிகம் உள்ள வாழைப்பூவினை உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோமே.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி