அருநெல்லி பயன்

 #அருநெல்லி பயன்கள்


அருநெல்லி எல்லா இடங்களிலும் விளையும் தன்மைமிக்கது!


அருநெல்லி, நெல்லிகளில் ஒரு இளவரசனைப் போல, ஏனென்றால், மற்ற நெல்லிகள் எல்லாம், சிறிய எலுமிச்சை அளவில் இருக்கும், இந்த அருநெல்லி மட்டும், அதில் #பாதியாக, உருவில் சிறிய அளவில் காணப்படும்.


குருஞ்செடியாகவும், சிறுமரமாகவும் வளரும் இயல்புடைய அருநெல்லி, பெரிய அளவிலான கிளைகளையும் கிளைகளில் கொத்துக்கொத்தாக காய்க்கும் மஞ்சள் வண்ண நெல்லிக்கனிகளைக் கொண்டதுமாகும்


"நெல்லியால் நெடும்பகை போகும்" என்பது, மூத்தோர் வாக்கு, இதில் நெடும்பகை என்பது உடல் வியாதி எனப்பொருள்படும்.


சித்த மருத்துவத்தில் பங்கு :


கருநெல்லியை நாம் முன்னோர் மூலமாக, சித்த இலக்கியங்கள் வாயிலாக மட்டும் கேட்டு வந்திருக்கிறோம், சித்த மருத்துவத்தில், உடலுக்கு நலம் தரும் மூலிகைகள் கருநிறத்தில் இருந்தால், அதுவே, காயகற்பமாக விளங்கி, மனிதரின் பிணி, மூப்பைத் தடுக்கும் என்பதால், அவற்றுக்கு மதிப்பு மிக அதிகம், ஆயினும், கிடைப்பது அரிது.


பெருநெல்லி எனும் நெல்லியே தற்காலத்தில் எங்கும் கிடைப்பதும், எல்லோரும் பயன்படுத்துவதுமாகும். சித்த மருத்துவத்தில் இருந்து, வீடுகளில் பயன்படுத்தப்படுவதும், இதுவே.


மூன்றாவது, அருநெல்லி, சித்த மருத்துவத்தில், அதிகம் பயன்படுத்தப்படாத இந்த நெல்லி, வீட்டு உபயோகங்களில் அதிகம் பயன்படுகிறது.


சிறுவர்களின் தோழன் அருநெல்லி!


மழைக்காலங்களில் காய்க்கும் அருநெல்லி மரங்களைக் கண்டால், சிறுவர்களுக்கு படுகுஷியாகிவிடும். பள்ளிக்கு செல்லும்போது, சிறுவர்களின் தினசரி "வாட்ச் லிஸ்டில்" சில மரங்கள் இருக்கும், அதில் இலைகள் துளிர்த்து, பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம் வரை ஆர்வமுடன் தினமும் கண்டுவருவர், காய்ப்பு ஆரம்பிக்கும் காலமான, காய்ப்பிஞ்சுகள் தோன்றும் காலத்தில் இருந்தே, சிறுவர்கள் "அலர்ட்" ஆகிவிடுவர், சில நாட்களில், பிஞ்சு காயாகிவிடும் என்று. இதுபோல, சிறுவர்கள் நோட்டமிட்டு பறிக்கும் காய்கள் நிரம்பிய மரங்களில் முதலிடம் பெறுவது, அரு நெல்லி மரம்!


சுவை அதிகம் :


பெருநெல்லியைவிட சற்று இதமான சுவையில் இருப்பதால், அந்த நெல்லியைப் போல உப்பிட்டு சாப்பிடவேண்டியதில்லை, அதனால், சிறுவர்களின் அரை டிராயர் பாக்கெட்களில், ஹவுஸ்ஃபுல்லாகும் அருநெல்லிகள்.


சமயங்களில், அந்தத் தோட்டக்காரர் பார்த்துவிட்டால்தான், ஆபத்து, ஆயினும், கிராமங்களில் எல்லாம் ஓரளவு தெரிந்த முகங்களாகத்தான் இருப்பார்கள் ஆதலால், பிரச்னைகள் வீடுவரை வந்து, வீட்டில் கிடைக்கும் தண்டனைதான், இவர்களுக்கு பேராபத்து! ஆம், ரூட்டை மாற்றிவிடுவார்கள். இந்த மரங்களின் வழியே பள்ளி செல்லும் வழக்கமான பாதையை, , வயலோரம், ஆற்றங்கரையோரம் சுற்றிக்கொண்டு செல்வதாக மாற்றிவிடுவார்கள் பாருங்கள், அதுதான் பாவம்,


நெல்லிக்காய் ஜூஸ் :


இந்த சிறுவர்கள், வழியில் அடித்து சாப்பிட மரங்கள் ஏதுமின்றி, சமயங்களில் அங்கும் வயல்களில் விளைந்திருக்கும், சோளக்கதிர்களில் பால் கதிர்கள் எனும் பிஞ்சுக்கதிர்கள், வெண்டைப்பிஞ்சுகள் போன்றவற்றை பதம் பார்ப்பார்கள் என்பது வேறு விஷயம்.


இதுபோல, சிறுவர்களின் விருப்பமிக்க, அருநெல்லி, பொதுவாக மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், வீடுகளில், அருநெல்லி இரசம், ஊறுகாய் மற்றும் அருநெல்லி ஜூஸ் செய்வர்.


அருநெல்லி இரசம்:


அருநெல்லிக்காய்களை கொட்டைகளை எடுத்துவிட்டு நன்கு சுத்தம் செய்துவைத்துக் கொள்ளவும். வேகவைத்த துவரம் பருப்பு அரை கப், சிறிது எலுமிச்சை சாறு, ஒரு தக்காளி, மூன்று பச்சை மிளகாய், இஞ்சி சிறு துண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி மற்றும் இந்துப்பு இவற்றை எடுத்துவைத்துக் கொள்ளவும்.


செய்முறை.:


கொட்டை நீக்கிய அருநெல்லியை சற்று அரைத்து, அத்துடன் சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, ஒன்றரை கப் நீரில் இட்டு, ஒரு வாணலியில் ஏற்றி சுட வைக்கவும். இதில் இஞ்சி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம் சிறிது இந்துப்பு சேர்த்து கலக்கவும். சில நிமிடங்களில் வேகவைத்த துவரம்பருப்பை கரைத்து கொதிக்கும் இரசத்தில் விடவும்.


#பசியின்மை போக்க :

நாவின் சுவையின்மையை சித்த மருத்துவம், "அரோசகம்" என்கிறது, இந்த அரோசகம் பாதிப்பு தீர, அருநெல்லிகளை ஊறுகாய் செய்துவைத்துக் கொண்டு, தினமும் உணவில் சேர்த்துவர, சுவையின்மை விலகி, உணவில் நாட்டம் வரும்.


அருநெல்லி ஊறுகாய் :


நன்கு சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கிய அருநெல்லி, வெந்தயம், மிளகாய்.


வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு இட்டு வெடித்தவுடன், அருநெல்லியை இட்டு நன்கு வதக்க வேண்டும், வதங்கியபின், தூளாக்கிய மிளகாய், வெந்தயம், பெருங்காயம் இவற்றை சீராகக் கலந்து, பிறகு சிறிது இந்துப்பு இட்டு, ஆறியபின், ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, உணவிற்கு தொட்டு சாப்பிட்டுவர, நாவூறவைக்கும் இதன் சுவையில், சுவையின்மை பாதிப்புகள் விலகி, உணவில் சுவை அறியும் தன்மை மீண்டும் ஏற்பட்டு, பசியின்மை விலகும்.


வாந்தி குமட்டல் நிற்க :


இந்த அருநெல்லி ஊறுகாய், கருவுற்ற மகளிருக்கு, ஆரம்ப மாதங்களில் ஏற்படும் வாந்தி, வயிறு குமட்டுதல் போன்ற பாதிப்புகள் நீங்க உதவும். சாதாரணமாக அருநெல்லியுடன் உப்பிட்டு சாப்பிட்டு வந்தாலும், பெண்களின் வாந்தி பாதிப்புகள் விலகும்.

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்